Showing posts with label விழிப்புணர்வு. Show all posts
Showing posts with label விழிப்புணர்வு. Show all posts

Saturday, January 12, 2013

நமக்கெல்லாம் புற்று நோய் (Cancer) வருமா?

நமக்கெல்லாம் புற்று நோய் (Cancer) வர வாய்ப்பே இல்லை என்று நிறைய பேர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். நாங்களும் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தோம்.

என் தந்தைக்கு திடீரென உடல் நலம் சரியில்லாமல் போனது. தொடர்ச்சியான இருமல். நுரையீரல் வெளியில் வந்து விழுந்து விடுமோ என்று பயப்படும் அளவுக்கு இருமல். உள்ளூர் மருத்துவரிடம் காண்பித்து கேட்டபொழுது “புற்று நோய் மாதிரி தெரிகிறது. உடனே அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் சேருங்கள்” என்று சொன்னார். எங்களுக்கு அவர் சொன்னதில் நம்பிக்கை இல்லாமல் வேறு ஒரு மருத்துவரிடம் அழைத்து சென்றோம். அவர் என் தந்தைக்கு புகைப்பிடித்தல் போன்ற கெட்ட பழக்கங்கள் உண்டா என்று கேட்டார். எந்த கெட்ட பழக்கமும் கிடையாது, தண்ணீரைக் கூட கொதிக்க வைத்துதான் குடிப்பார் என்று சொன்னோம். அப்படியென்றால் இது கேன்சராக இருக்க வாய்ப்பே இல்லை என்று ஆணித்தரமாக சொல்லி விட்டார். அங்கேதான் என் தந்தையின் அழிவு ஆரம்பம் ஆனது.

தொடர்ந்து உடல்நிலை மோசமாகிக்கொண்டே போக, மதுரையில் ஒரு பிரபல மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு என்ன சிகிச்சை செய்தார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். ஒரு கட்டத்தில் என் தந்தை அடிக்கடி சுயநினைவிழந்து கீழே விழுந்தார். என் உறவினர்கள் ஆலோசனைப்படி என் தந்தையை சென்னைக்கு அழைத்து வந்து வடபழனியில் உள்ள பிரபல மருத்துவமனையில் சேர்த்தோம். ஏற்கனவே பல ஆயிரங்கள் செலவு செய்து இதுவரை எடுத்த அத்தனை சோதனைகளையும் நிராகரித்துவிட்டு புதிதாக அனைத்து சோதனைகளையும் செய்தார்கள்.

இறுதியில் அவருக்கு நுரையீரலில் புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. அது ஒரு கொள்ளைக்கார மருத்துவமனை என்பது ஒரு வாரம் என் தந்தையை அவர்கள் நடத்திய விதத்தில் தெரிந்து விட்டது. ஒருவழியாக அங்கிருந்து என் தந்தையை அப்புறப்படுத்தி சேத்துப்பட்டில் இருக்கும் ஒரு பிரபல புற்று நோய் மருத்துவமனையில் சேர்த்தோம். அதன் பின்னர் என் தந்தை கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் தேறி வந்தார்.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கும் வந்து விட்டார். இதற்குள் கிட்டத்தட்ட 8 லட்சம் செலவாகி விட்டது. அதன் பின்னர் ஒரு வருடம் எந்த பிரச்சினையும் இன்றி ஓடியது.

ஒரு நாள் திடீரென்று பார்வை மங்கியது. கண் டாக்டரிடம் சென்று காண்பித்தோம். ஆனால் பார்வையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. கண் மருத்துவரின் ஆலோசனைப்படி தொடர்ந்து மருந்து சாப்பிட்டு வந்தவர் ஒருநாள் மயங்கி விழுந்தார். உள்ளூர் மருத்துவர் ஒருவர் ஊசி போட்டதில் மயக்கம் தெளிந்தது. ஆனால் பேச்சு வரவில்லை. நிலைமை ரொம்ப மோசமாகி இருந்தது. சென்னை வரை கொண்டுவர அவகாசம் இல்லை. அதனால் மதுரை அப்பல்லோவில் சேர்த்தோம். புற்று நோய் மூளைக்கு பரவியதுதான் காரணம்.

அந்த கடைசி இரண்டு நாட்களில் அவரது உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்து கொண்டே வந்தது. செயற்கை சுவாசம் மூலம் மூச்சு விட்டுக்கொண்டிருந்தார். நான் அருகில் சென்று அப்பா என்று சொல்லி அவர் கையை பிடித்தேன். அவருடைய கை என் கையை இருகப்பற்றிக்கொண்டது. அவர் என்னிடம் ஏதோ சொல்ல நினைக்கிறார் என்பது மட்டும் புரிந்தது. மூடியிருந்த அவர் விழிகளின் ஓரம் கண்ணீர். அந்தத் தருணம், இதுவரை நான் அனுபவித்திராத சோகம்.

எல்லாம் முடிந்துவிட்டது. என் தந்தையின் வாழ்நாள் சேமிப்பு, சேர்த்துவைத்த சொத்து எல்லாம் கரைந்தும் உயிர் மிஞ்சவில்லை. நாங்கள் செய்த மாபெரும் தவறு என்னவென்றால், உள்ளூர் மருத்துவர் ஆரம்பத்திலேயே புற்றுநோயாக  இருக்கும் என்று சொன்னதும் அதை நம்பியிருக்க வேண்டும். ஆரம்பத்திலேயே சிகிச்சை தொடங்கியிருந்தால் இன்னும் ஓரிரு ஆண்டுகள் என் தந்தை வாழ்ந்திருக்க கூடும்.

புற்று நோய் என்பது உயிரை குடிக்கும் நோய் மட்டுமல்ல. அது ஒரு சித்ரவதை. உடலை பரிசோதனை செய்யும்போதும், சிகிச்சையின் போதும் அனுவவிக்கும் வேதனையானது ஒவ்வொரு முறையும் செத்து செத்து பிழைப்பதற்கு சமம்.
நானோ ஓரிரு மாதங்களில் சகஜ நிலைக்கு திரும்பிவிட்டேன். என் தந்தை அனுபவித்த துன்பங்களை அருகிலேயே இருந்து பார்த்த என் தாயும் அவரை எப்படியாவது காப்பாற்றிவிட மாட்டோமா என்று துடியாய் துடித்த என் தங்கையும் இன்று வரை மீளவே இல்லை.

நமக்கு நெருங்கிய உறவினர்கள் யாராவது புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே அதன் விபரீதங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது.

கேன்சருக்கென்று ஒரு தடுப்பூசி இல்லாத காரணத்தால் அது பற்றிய விழிப்புணர்வு ஓரளவுக்காவது பலனளிக்கும் என்று நினைக்கிறேன்.

Thursday, January 10, 2013

வெற்றியும் நானும் - தொடங்கியதும் முடிந்து போன நட்பு (உண்மை சம்பவம்)

எங்கள் அலுவலகத்தில் என்னுடன் பணிபுரிந்த நண்பர் வெற்றிவேல் என்பவருக்கும் எனக்கும் இருந்த நட்பை பற்றிய பதிவு இது. விழிப்புணர்வு பதிவும் கூட.

புதிதாக அறிமுகம் ஆகும் நபர்களிடம் நான் அவ்வளவு சீக்கிரம் பழகுவதில்லை. ஆனால்  வெற்றியோ எல்லோரிடமும் சுலபமாக பழகுபவர். ஒருமுறை நான் புதிதாக வாங்கியிருந்த டிஜிட்டல் கேமராவை நண்பர்களிடம் காட்டிக்கொண்டிருந்தேன். அப்போது  கேமராவை கையில் வாங்கிய வெற்றி அதிலுள்ள எல்லா பட்டன்களையும் அமுக்கி அமுக்கி பார்த்துக்கொண்டிருந்தார். எனக்கு சரியான கோபம் இருந்தாலும் கோபத்தை அடக்கிக்கொண்டு பொறுமையாக இருந்துவிட்டேன். இதுபோல ஒருசில சம்பவங்களால் நான் அவரிடம் பழகுவதை தவிர்த்து வந்தேன்.

ஆனால் அலுவல் நிமித்தமாக அவருக்கும் எனக்கும் அடிக்கடி தொடர்பு ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. சிறிது நாளில் அவர் மேல் இருந்த கோபம் எல்லாம் போய் நட்பு வளர ஆரம்பித்தது. நன்றாக பேசவும் அரட்டை அடிக்கவும் ஆரம்பித்தோம். நட்பு வளர்ந்து பேஸ்புக் மூலம் தொடர்ந்தது. ஒருநாள் நான் வீட்டுக்கு சென்றதும் பேஸ்புக் திறந்து பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது வெற்றி சாட்டில் "வீட்டுக்கு போனதும் பேஸ்புக் ஆ?" என்று கேட்டார் நான் பதிலுக்கு ஒரு சிரிப்பு ஸ்மைலியை மட்டும் போட்டு விட்டேன்.



இதுதான் நான் அவரிடம் பண்ணும் கடைசி சாட் என்பது அப்போது எனக்கு தெரிந்திருக்கவில்லை.

மறுநாள் (11/11/11) காலை 6:45 மணிக்கு நடந்த சாலை விபத்தில் வெற்றி பலியாகி விட்டார் என்று தகவல் வந்தது. குறைந்த நாட்களே பழகி இருந்தாலும் என் மனம் அடைந்த துயரம் மிக அதிகம். வீட்டிலிருந்து விபத்து நடந்த இடத்துக்கு இருசக்கர வாகனத்தில் கிளம்பினேன். கை கால்களில் நடுக்கம். எவ்வளவு முயன்றாலும் வண்டி 30 கிமீ வேகத்தை தாண்டவில்லை. நான் சென்று சேர்ந்த பொழுது உடலை மருத்துவமனைக்கு எடுத்து சென்று விட்டார்கள்.

வெற்றி அவர் மனைவி இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்ததால் இருவரும் அதிகாலை 6 மணி அளவில் இரு சக்கர வாகனத்தில் வந்திருக்கிறார்கள். இவர்கள் வாகனத்தை முந்திச்செல்ல அசுர வேகத்தில் ஒரு அரசுப் பேருந்து வந்திருக்கிறது.  சில நாட்களுக்கு பெய்த மழையில் சாலை ஓரம் குண்டும் குழியுமாக இருந்ததினால் இவரால் உடனடியாக வழி விட முடியவில்லை. பொறுமை இல்லாத பேருந்து டிரைவர் இடித்ததில் இருவரும் கீழே விழுந்து விட்டனர். வெற்றியின் மனைவி இடது பக்கம் விழுந்ததால் இலேசான காயங்களுடன் உயிர் தப்பினார். ஆனால் பேருந்து வெற்றியின் தலையை நசுக்கி விட்டு நிற்காமல் சென்று விட்டது. மனைவி கண்முன்னே கணவன் துடிதுடித்து இறப்பது எவ்வளவு கொடியது?

விபத்து நடந்தது எங்கள் அலுவலகத்துக்கு மிகவும் அருகில் என்பதால் அப்போது பணியில் இருந்த அனைவரும் (சுமார் 100 பேர்) விபத்து நடந்த இடத்தில் கூடி இருந்தார்கள். அனைவர் முகத்திலும் சோகம். பெரும்பாலானவர்கள் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றுவிட்ட அரசுப் பேருந்து டிரைவரை கைது செய்ய வென்றும் என்று கோரி சாலை மறியல் செய்ய வேண்டும்  என்று திட்டமிட்டுக்கொண்டிருந்தார்கள். எங்கள் அலுவலக மேலாளர் ஒருவர் வந்து அனைவரும் அலுவலகத்துக்கு திரும்பி வந்து வேலை செய்யுமாறு சொல்லிக்கொண்டிருந்தார். இன்னொரு மேலாளர்  அங்கிருந்த போலீசிடம் "இங்கே இவர்கள் (சக ஊழியர்கள்) நிற்கும் ஒவ்வொரு நிமிடமும் கம்பெனிக்கு நஷ்டம். அதனால் இவர்களை துரத்தி விடுங்கள்" என்று சொன்னதாக நண்பர்கள் சொன்னார்கள். மிகவும் வருத்தமாக இருந்தது.

வெற்றி செய்த தவறுகள்: 

1. தலைக்கவசம் அணியாமல் வண்டி ஓட்டியது.
2. லைசன்ஸ் வாங்காமல் வண்டி ஓட்டியது.
 தலைக்கவசம் அணியாததால் உயிரை இழக்க நேரிட்டது.
லைசன்ஸ் இல்லாததால் மனைவிக்கு இழப்பீடு கிடைக்கவில்லை.

சக ஊழியர்கள் அனைவரும் ஒரு நாள் ஊதியத்தை வெற்றியின் மனைவிக்கு கொடுத்து உதவுவதாக முடிவெடுத்தோம்.  அந்தத் தொகையுடன் எங்கள் நிறுவனம் சார்பிலும் ஒரு தொகை சேர்த்து அவர் மகள் பெயரில் டெபாசிட் செய்தார்கள். ஆம் அவருக்கு மூன்று  வயதில் ஒரு மகள்  இருக்கிறாள். மேலும் சில ஊழியர்கள் சென்னை மேயரை சந்தித்து நிலைமையை சொல்லி அரசு நிவாரணத் தொகை வாங்கிக் கொடுத்தார்கள்.

எவ்வளவு பணம் வந்தாலும் ஒரு உயிருக்கு ஈடாகாது.

அப்பா எப்போ எழுந்திருப்பாரு என்று கேட்டுக்கொண்டு அங்கே சுற்றிக்கொண்டிருந்த அந்த மூன்று வயதுக் குழந்தையின்  முகம் இன்றும் என் மனக்கண்ணில் நிழலாடுகிறது.


Monday, January 31, 2011

ஒழுக்கம் கெட்ட இந்தியனே எங்கள் பொருளை வாங்கிக்கொள்

சமீபத்தில் பார்த்து எரிச்சல் அடைந்த ஒரு தொலைகாட்சி விளம்பரம்.

விமானத்தினுள் இருந்த பயணிகள் லேசாக குலுங்கி பின் சமநிலைக்கு வருவதிலிருந்து விமானம் தரை இறங்கிவிட்டது என்பது புரிகிறது.

புது தில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. விமானம் நிற்கும்வரை சீட் பெல்ட்டை அணிந்தே இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அறிவிப்பு முடியும்முன் அனைவரும் சீட் பெல்ட்டை அவிழ்த்து விட்டு எழுந்திருக்கின்றனர்.

தங்கள் உடைமைகளை மேலிருந்து இறக்கும்பொழுது கவனமாக இறக்கவும்.

ஒருவர் மேலிருந்து தன்னுடைய உடைமைகளை எடுக்கும்போது அவர் பெட்டி சீட்டில் அமர்ந்திருக்கும் இன்னொருவர் மேல் பொத்தென்று விழுகிறது.

தயவு செய்து செல்போன் உபயோகிக்காதீர்கள்.

ஏதேதோ ரிங்டன் சப்தங்களும் போனில் பேசிக்கொள்ளும் சப்தங்களும் கேட்கின்றது.

அனைவரும் அவரவர் இடத்திலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

விமானம் நிற்பதற்குள் அனைவரும் மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறுவதற்குத் தயாராக கதவின் அருகில் முண்டியடித்துக்கொண்டு நிற்கின்றனர்.

காட்சி முடிந்தது.

பின்னணியில் ஒரு குரல்: நம்முடைய இந்த அவசரமான வாழ்க்கையில் நமக்குத் தேவை அதிவேக இன்டர்நெட் கனெக்க்ஷன். அதனால் வாங்குவீர் __________ DATA CARD.

இந்த விளம்பரத்தில் அதிவேக இன்டர்நெட் தேவைக்கும் காட்சிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முழுக்க முழுக்க இந்தியர்களைப் பற்றி கேவலமாகக் காட்டிவிட்டு எங்க இன்டர்நெட் கனெக்க்ஷன வாங்கிக்கோங்க அப்படின்னு சொல்றான்.  நமக்குத்தான் நம்மள நாமளே தாழ்த்திக்கொள்வது ரொம்பப் பிடிக்குமே. அதனால அதப் பார்த்து ரசிச்சுட்டு போயிட்டே இருப்போம்.

Wednesday, January 12, 2011

சாலையில் சாகசமும் வீணாகும் உயிர்களும்...

காலை ஒன்பது மணி. இரு சக்கர வாகனத்தில் அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது மற்றொரு இரு சக்கர வாகனம் என்னை வேகமாக முந்தி சென்றது. அதில் சுமார் இருபது வயது மதிக்கத் தக்க இருவர் சென்றனர். சாலை நேராக இருந்தபோதிலும் அந்த பைக்கை ஒட்டியவன் வளைத்து வளைத்து பந்தாவாக(?) ஒட்டி சென்றான். முன்னாள் சென்று கொண்டிருந்த ஒரு மாநகரப் பேருந்தை இடதுபுறமாக முந்திச் செல்ல முயன்றான்.  சாலையின் ஓரத்தில் பேருந்துக்கு சற்று முன்னால் ஆட்டோ ஒன்றும் நின்று கொண்டிருக்கிறது. பேருந்து அந்த ஆட்டோவை நெருங்கும் முன் இவன் பேருந்தை முந்த வேண்டுமென்பது இவனது திட்டம். ஆனால் இவன் திட்டம் பலிக்கவில்லை. ஆட்டோ மீது இவனது பைக் லேசாக உரசியதைப் பார்த்தேன். அதற்குப்பின் அந்த பைக்கைக் காணவில்லை. அடுத்த வினாடி டம டம என்று சப்தம். பேருந்து கிரீச்சிட்டு சடன் பிரேக் போட்டு நின்று விட்டது. கொஞ்சம் முன்னால் சென்று பார்த்தால் பேருந்தின் முன் சக்கரத்துக்கு அடியில் பைக் நசுங்கிக் கிடந்தது. அந்த இருவரையும் காணவில்லை. இதற்குள் கூட்டம் கூடி விட்டது. அனைவரும் பதைபதைக்கும் நெஞ்சத்தோடு பேருந்துக்கு கீழே குனிந்து பார்த்துக் கொண்டிருந்தனர். இரண்டு பேரும் காலி என்று நினைத்தேன். ஆனால் முகம் கை கால்களில் ரத்தம் சொட்டச் சொட்ட உருண்டு எழுந்து நடந்து வந்தனர் இருவரும். யார் செய்த புண்ணியமோ உயிர் பிழைத்து விட்டனர். ஒருவேளை உயிர் போயிருந்தால்? பின்னால் அமர்ந்து வந்த பையனும் நண்பனுடன் போய் சேர்ந்திருப்பார் (நண்பேன்டா !!!).

இருவரும் பேருந்தின் அடியிலிருந்து வெளியே வரும்போது அவர்கள் இருவரின் முகத்திலும் மரண பயம் தெரிந்தது. பேயறைந்தாற்போல் வெளிறிப்போய் இருந்தது அவர்கள் முகம். உய்யலாலா பாடிக்கொண்டு சந்தோஷமாக இருந்த அவர்களின் நிலை நொடியில் மாறிப்போனது.

பேருந்தின் வலதுபுறம் முந்திச்செல்ல வழி இருந்தும் இவன் இடதுபுறம் சென்றது ஏன் என்பது அனைவரும் அறிந்ததே. இடதுபுறம் சென்றால் தான் பேருந்தில் உள்ள பெண்களைக் கவர முடியும். எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான். இப்படி பந்தாவாக பைக் ஓட்டிச்செல்வதை உண்மையிலேயே இளம் பெண்கள் ரசிக்கிறார்களா அல்லது "லூசுப்பய" என்று நினைக்கிறார்களா என்பது தான். எப்படி நினைத்தாலும் நஷ்டம் என்னவோ பைக் ஒட்டுபவருக்குத்தான். 

எத்தனை உயிர்ப்பலி நடந்தாலும் இது போன்ற நபர்கள் சட்டை செய்யப்போவதில்லை. தனக்கென வரும்போதுதான் தெரியும். அப்போது உயிர் இருந்தால் திருந்த வாய்ப்பு உள்ளது.

பிரபல (?) பதிவுகள்