Tuesday, January 4, 2011

கிரெடிட் கார்ட் எனும் புதைகுழி

சுமார் ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு என்னிடம் கிரெடிட் கார்ட் கிடையாது. அவசர தேவைக்காக உதவும் என்று எண்ணி கிரெடிட் கார்ட் வேண்டி விண்ணப்பித்தேன். கஜினி முகம்மதுவை விட அதிக தடவை பல வங்கிகளில் விண்ணப்பித்ததும் எந்த வங்கியும் எனக்கு கருணை(?) காட்டவில்லை. என் நண்பர்களில் ஒரு சிலர் பர்ஸ் நிறைய கிரெடிட் கார்டுகளை அடுக்கி வைத்துக்கொண்டு பந்தா காட்டுவார்கள். நமக்கு மட்டும் ஏன் இந்த வங்கிகள் தருவதில்லை என்று புரியாமல் தவித்துக்கொண்டிருந்தேன்.

ஆச்சரியப்படத்தக்க வகையில் எதிர்பாராத விதமாக ஒரு கிரெடிட் கார்ட் வந்து சேர்ந்தது. ஆஹா! கடவுள் கண் திறந்து விட்டார் என்று சந்தோஷம் அடைந்தேன் (அதுதான் புதைகுழியின் முதல் அடி என்பது அப்போது புரியவில்லை). கிரெடிட் கார்ட் வந்துவிட்டது ஆனால் அதை சும்மா வைத்திருந்தால் நமக்கு அவமானம் அல்லவா.. எனவே EMI இல் பொருட்கள் வாங்கி குவிக்க ஆரம்பித்தேன். நினைத்த பொழுதெல்லாம் ஷாப்பிங். என்னவெல்லாம் வாங்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அதை எல்லாம் விலையை பற்றி கவலைப்படாமல் வாங்கி வந்தேன். அதிகம் செலவழித்தது எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்குத்தான்.

ஒரு கார்ட் வாங்கியவுடன் மற்ற வங்கிக்காரர்களுக்கு எப்படித்தான் மூக்கு வேர்த்து விடுகிறதோ தெரியவில்லை. கிரெடிட் கார்ட் வாங்கச்சொல்லி தினமும் ஒரு அழைப்பாவது வந்துவிடும் (ஏன்யா உங்களுக்கு இவ்வளவு நல்ல எண்ணம்?). சரி... காசா பணமா? ஒசியாத்தானே குடுக்குறாங்க. ஒண்ணுக்கு நாலா வாங்கிப்போடுவோம்னு நாலைந்து கார்டுகளை வாங்கிப்போட்டேன். பர்ஸுல வைக்க இடம் இல்லாமல் போகவே இனிமேல் போதும் என்று முடிவெடுத்திருந்தேன். அந்த நேரம் எனக்கு ஒரு கால் வந்தது. வழக்கம் போலவே அது ஒரு பெண்.

பெண்: "நாங்க ____ வங்கியில இருந்து பேசுறோம் சார்"
நான்: "சொல்லுங்க மேடம்"
பெண்: "உங்களுக்கு லைப் டைம் ப்ரீ கிரெடிட் கார்ட் சாங்க்ஷன் ஆகியிருக்கு சார்"
நான்: நான் அப்ளை பண்ணவே இல்லையே
பெண்: "உங்களுக்கு ப்ரி-அப்ப்ரூவ் ஆகி இருக்கு சார். நீங்க ஓகே சொன்னா டாகுமென்ட் கலெக்ட் பண்ண ஆள் அனுப்புறோம் சார்.
நான்: இல்ல எனக்கு கிரெடிட் கார்ட் வேண்டாம்.
பெண்: "ஏன்  சார்?
நான்: ஏற்கனவே என்கிட்டே நிறைய கிரெடிட் கார்ட் இருக்கு.
பெண்: "எந்தெந்த வங்கி கார்ட்லாம் வச்சிருக்கிங்க சார்?
நான்: ICICI, SBI, HDFC, Duetch bank.....
பெண்: "எல்லா வங்கியிலும் வாங்குறிங்க. எங்க வங்கி கார்ட் மட்டும் ஏன் சார் வாங்க மாட்டேங்கிறிங்க?
நான்: ஆள விடுமா தாயினு சொல்லிட்டு  இப்படி கூடவா பிட்ட போடுவாங்க என்று நினைத்துக்கொண்டே  கட் பண்ணி விட்டேன். இவங்களுக்கெல்லாம் இப்படி பேசுறதுக்கு ட்ரைனிங் குடுக்குறாங்களா இல்ல தானா வருதா??

ஓரிரு வருடங்கள் சுமுகமாக சென்றது. அப்போது மாதா மாதம் பில் தொகையை செலுத்த முடிந்தது. நாட்கள் செல்லச்செல்ல கிரெடிட் கார்ட் பில் மட்டுமே செலுத்த முடிந்தது. மற்ற செலவுகளுக்கு கையில் காசு இருப்பதில்லை. கர்ண பரம்பரை நண்பர்கள் (விஜயானந்த், சுதாகர், வினோத்குமார்) சிலர் இருப்பதால் அவர்களிடம் ஐந்நூறு ஆயிரம் என்று வாங்கி மிச்ச மாதத்தை ஒட்டி விடுவேன். அடுத்த மாதம் ஆரம்பித்ததும் கிரெடிட் கார்ட் பில்லும் கட்ட வேண்டும். நண்பனின் பணத்தையும் திருப்பி தரவேண்டும். நண்பனை பகைத்துக்கொள்ள விருப்பமில்லை (அப்போதான் அடுத்த மாதம் பணம் தருவான்). நண்பனுக்கு கொடுக்கவேண்டியதை கொடுத்துவிட்டு மீதம் உள்ளதை மட்டும் கிரெடிட் கார்டுக்கு கட்டி விடுவேன்.

இப்போதுதான் புதை குழிக்குள் நான் சிக்கி இருப்பதை உணர ஆரம்பித்தேன். இதிலிருந்து வெளியே வர சில முயற்சிகள் எடுத்தும் எதுவும் பலனளிக்கவில்லை. இப்படியே தொடர்ந்த என் கதை கடந்த வருடம் மிகவும் கவலைக்கிடமானது.  மினிமம் அமவுண்ட் மட்டுமே கட்ட முடிந்தது. இனியும் தாமதிப்பது நல்லதல்ல. ஏதாவது செய்தாக வேண்டும். பெரிதாக ஒரு யோசனையும் தோன்றவில்லை. ஒரு பர்சனல் லோன் போட்டு எல்லாத்தையும் செட்டில் பண்ணி விட்டேன். இனிமேல் கிரெடிட் கார்டை தொடவே கூடாது என்று முடிவு பண்ணி விட்டேன். ஆனாலும் உடைத்துப்போட மனம் வரவில்லை. அவசரத்தேவைக்கு உதவுமே.....

1 comment:

  1. இது தொடர்பான மற்றொரு கட்டுரை...

    http://chillsam.wordpress.com/2011/01/21/credit-card/

    ReplyDelete

பிரபல (?) பதிவுகள்