Tuesday, August 27, 2013

என்னைக் கவர்ந்த கவிதை - சுதந்திர சிறகுகள்

கீழே உள்ள இணைப்பில் கவிதையை வாசித்துக் கொள்ளுங்கள். சிரமத்திற்கு மன்னிக்கவும்.
http://pandukavi16.blogspot.in/2013/08/11-2013.html

Monday, June 17, 2013

நாடி ஜோதிடம் - ஏமாறப்போகிறோம் என்று தெரிந்தே ஏமாந்த கதை


கடவுள், பேய், அருள்வாக்கு, ஜோதிடம், நியூமராலஜி  இது போன்ற விஷயங்களில் எனக்கு நம்பிக்கை கிடையாது. என் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவருக்கு இதுமாதிரி விஷயங்களில் அதிக நம்பிக்கை உண்டு. பொழுது போகாத நேரங்களில் இதைப் பற்றி விவாதங்கள் நிறைய நடக்கும். ஒருநாள் பேச்சு நாடி ஜோதிடம் பற்றி சென்றது. "திருவான்மியூரில் ஒரு நாடி ஜோதிட நிலையம் உள்ளது. அங்கு நம்முடைய விரல் ரேகையை மட்டும் கொடுத்தால் போதும். நம் பெயர், அப்பா பெயர், அம்மா பெயர், உடன் பிறந்தவர்கள் பெயர் என்று எல்லாமே சொல்லி விடுவார்கள். நம்மை பற்றிய அத்தனை விஷயங்களும் அந்த ஓலையில் இருக்கும்" என்று அவர் சொன்னார். மேலும் உலகத்தில் உள்ள அனைவருக்கும் ஓலைகள் இருக்கும் என்றார். அவரிடம் மேலும் துருவி துருவி விசாரித்ததில் எல்லா விஷயங்களையும் நம் வாயிலிருந்தே வரவைத்து சொல்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாக புரிந்தது. இருந்தாலும் அவர் அதை ஒப்புக்கொள்ளவில்லை. நீங்களே நேரடியாக அங்கு வந்தால் தான் நீங்கள் நம்புவீர்கள் என்று சொன்னார். ஏமாறப்போகிறோம் என்று தெரிந்தாலும் அவரை திருத்தலாம் என்பதற்காக சரி என்று சொல்லிவிட்டேன்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை பதினொரு மணிக்கு அங்கு சென்றோம். நாங்கள் சென்ற பொழுது அவர் அங்கு இல்லை. அவரின் உதவியாளர் ஒருவர் எங்களை வரவேற்று உட்கார வைத்தார். எங்களைப் பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்தார். அவர் அறையில் ஒரு மணி நேரம் காத்திருந்தோம். அதில் டிவி, நிறைய ஜோதிடம் பற்றிய புத்தகங்கள் மற்றும் ஒரு கம்ப்யூட்டர் இருந்தது. கம்ப்யூட்டரில் மைக் இணைக்கப்பட்டு இருந்தது. நம் ஓலையில் உள்ள பலன்களை படித்து அதை சிடியில் பதிந்து தருவார்களாம்.

சிறிது நேர காத்திருப்புக்கு பின் ஜோதிடர் வந்தார். பேன்ட் ஷர்ட் போட்டு வந்தவர் காவி உடை மாற்றிக்கொண்டார். எங்களை நோக்கி "யாருக்கு பார்க்கணும்?" என்று கேட்டார். உறவினர் ஒருவருக்கு என்று சொன்னேன். அவர் கை ரேகை கொண்டு வந்திருக்கிறீர்களா என்று கேட்டார். ஆமாம் என்றேன். பின்னர் நான் கொண்டு போயிருந்த ரேகை வைத்த தாளை வாங்கிக்கொண்டார். கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க இந்த ரேகைக்கான ஓலைகளை எடுத்து வருகிறேன் என்று சொல்லி சென்று விட்டார். பத்து நிமிடம் கழித்து கையில் மூன்று கட்டுகளை எடுத்து வந்தார். ஒவ்வொரு கட்டிலும் ஐம்பது ஓலைகள் இருக்கலாம். ஒளியின் இரண்டு பக்கமும் புரியாத பாஷையில் ஏதோ இருந்தது.

வந்து அமர்ந்தவர், வாயில் நுழையாத ஏதோ ஒரு மந்திரத்தை உச்சரித்தார். "நான் கேட்பதற்கெல்லாம் ஆமாம் இல்லை என்று மட்டும் பதில் சொல்லுங்கள். ஓலையை எடுத்துவிடலாம்" என்றார். சரி என்றேன். அப்படியே என்னுடைய கைபேசியில் voice recorder on பண்ணி வைத்துவிட்டேன்.

"அவர் பெயர் "ம" கர வரிசையில் ஆரம்பிக்குமா?"

"இல்லை"

"க?"

"இல்லை"

"ச?"

"இல்லை"

இப்படியே தமிழில் உள்ள முக்கால்வாசி எழுத்து வரிசைகளை கேட்டு  கடைசியில் முதல் எழுத்து "த" கர வரிசையில் வரும் என்று கண்டுபிடித்து விட்டார். ஆஹா!  என்ன ஒரு கண்டுபிடிப்பு. அதன் பிறகு த, தா, தி, தூ என்று ஒரு நூறு பெயர்கள் சொல்லி இருப்பார். இல்லை இல்லை என்று சொல்லி சொல்லி அலுத்துவிட்டது. கடைசியில் ஒரு வழியாக சரியான பெயரை சொன்னார். அப்பாடா நிம்மதி என்று இருந்தது. பெயரை கண்டுபிடிக்க முயற்சி பண்ணிக்கொண்டிருக்கும்போது இடை இடையே அவர் கேட்ட கேள்விகள்:

"அவர் படித்துக்கொண்டிருக்கிறார்"

"இல்லை"

"திருமணம் ஆகி விட்டது"

"இல்லை"


"பெண் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்"

"ஆம்"

"ஜாதகம் தட்டி தட்டி போகிறது"

"ஆம்"

"அப்பா இருக்கிறார்"

"இல்லை"

"அம்மா இருக்கிறார்"

"ஆம்"

"இவர் வேலையில் இருக்கிறார்"

"ஆம்"

"கம்ப்யூட்டர் வேலை"

"ஆம்"

"இவருக்கு ஒரு அண்ணன் உண்டு"

"இல்லை"

"ஒரு தங்கை உண்டு"

"ஆம்"

"தங்கைக்கு திருமணம் ஆகி விட்டது"

"ஆம்"

"இவர் பிறந்த வருடம் 1980"

"இல்லை"

"1985"

"ஆம்"

"பிறந்த மாதம் செப்டம்பர்"

"இல்லை"

"ஆகஸ்ட்"

"இல்லை"

"ஜனவரி"


"இல்லை"

"நவம்பர்"

"இல்லை"

"ஜூலை"

"ஆம்"

இதேபோல் ஒன்று முதல் முப்பத்தொன்று வரை எல்லா நம்பரையும் சொல்லி தேதி கண்டுபிடித்தார்.

அடுத்தது அப்பாவின் பெயர் கண்டுபிடிக்க போகிறேன் என்று சொல்லி அதே "ம" கர "த" கர கேள்விகளை கேட்டு இம்சை பண்ணிக்கொண்டிருந்தார். இவ்வளவு நேரமும் ஒவ்வொரு கேள்விக்கும் ஒவ்வொரு ஓலையை திருப்பிக்கொண்டே வந்தவர், ஓலை காலியாகப்போகின்றது என்றதும் ஒரே ஓலையை வைத்துக்கொண்டு நான்கைந்து கேள்விகள் கேட்க ஆரம்பித்தார். அப்பா பெயரை கண்டுபிடித்த பிறகு அம்மா பெயரையும் இதே முறையில் கண்டுபிடித்தார். அதையெல்லாம் விளக்கமாக போட்டால் ஒரு இருபது பக்கத்துக்கு எழுதும் அளவுக்கு போகும்.

எல்லாவற்றையும் என் வாயில் இருந்தே கேட்டு விட்டு இறுதியாக ஒரு ஓலையை எடுத்து "இதுதான் உங்கள் ஓலை. படிக்கிறேன் கேளுங்கள். இவர் பெயர் ....... பிறந்த தேதி ........... அப்பா பெயர் ....... அம்மா பெயர் ...... உடன் பிறந்தது ஒரு தங்கை. தங்கைக்கு திருமணம் ஆகிவிட்டது. எல்லா விபரமும் சரியாக உள்ளதா?" என்று கேட்டார். ஆம் என்றேன். "தட்சிணை ஐந்நூறு ரூபாய் அகத்தியர் பாதத்தில் வைத்து வணங்கிவிட்டு செல்லுங்கள். பலன்கள் எழுதி வைக்கிறேன். மூன்று மணி நேரம் கழித்து வந்து வாங்கி செல்லுங்கள்" என்றார். திரும்பி வந்த பிறகு எழுதி வைத்திருந்த நோட்டை படித்து USB Audio recorder ல் பதிவு செய்து அதை கணினி மூலம் CD யில் பதிந்து கொடுத்தார்.

அந்த நோட்டில் குறிப்பாக எந்த பலனும் சொல்லவில்லை.

  • 29 ல் இருந்து 31 வயதுக்குள் திருமணம் ஆகும். 
  • அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லாமல் போகும். தகுந்த சிகிச்சை செய்தால் குணமாகும். 
  • அம்மாவுக்கு எதிர்காலத்தை நினைத்து பயம் இருக்கும். 

இப்படி நாம் சாதாரணமாக யூகிக்கக் கூடிய விஷயங்களே இருந்தன. கணவனை இழந்த மனைவி எதிர்காலத்தை நினைத்து பயப்படாமல் இருப்பார்களா? உடல் நலம் சரியில்லாமல் போவது மனிதனாய் பிறந்த அனைவருக்கும் பொதுவானது. இதெல்லாம் ஓலையில் உள்ளது என்று வாய் கூசாமல் பொய் சொல்கிறார்கள்.

நாங்கள் அங்கு காத்திருந்த நேரத்தில் இன்னொரு நபர் நாடி ஜோதிடம் பார்க்க வந்திருந்தார். அவரிடம் பேசியதில் அவர் இதுவரை நாலாயிரம் ரூபாய்  நாடி ஜோதிடத்திற்கு செலவழித்து விட்டாராம். இன்னும் அவர் பிரச்சினை தீரவில்லையாம்.

எங்களுக்கு  சொன்னது பொது காண்டம். இதற்கு மட்டுமே 500 ரூபாய். இது போல் ஏழு காண்டங்கள் உள்ளதாம். ஒவ்வொரு காண்டத்துக்கும் தலா 500 ரூபாய் ஆகும் என்றார். ஆளை விட்டால் போதும் என்று ஓடி வந்து விட்டேன்.

வீட்டுக்கு  வந்த பிறகு அங்கு நடந்த ஒவ்வொரு விஷயங்களையும் விலாவாரியாக எடுத்து சொல்லி புரிய வைத்ததால் என்னை அங்கு கூட்டிச்சென்றவருக்கும் இதன் மேல் நம்பிக்கை குறைந்து விட்டது. இனிமேல் யாரையும் அங்கு கூட்டிச் செல்ல மாட்டார் என்று நினைக்கிறேன்.

ஏமாற்றுக்கார ஜோதிடர்களுக்கு என்னுடைய கேள்விகள்:

எல்லா விவரங்களையும் எங்கள் வாயில் இருந்தே வரவழைப்பதற்கு ரேகை எதற்கு?

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஓலைகளில் ஆங்கில தேதி எப்படி இருக்க முடியும்?

உலகில் உள்ள அனைவருக்கும் ஓலை இருக்கும் என்கிறீர்கள். இதுவரை தோன்றி மறைந்த மனிதர்கள் எத்தனை கோடி பேர். இனிமேல் பிறக்கப்போகின்றவர்கள் எத்தனை கோடி பேர். இவ்வளவு பேருடைய ஓலைகளை உங்கள் சிறிய அறையில் எப்படி வைக்க முடியும்?

திருமணம் ஆகாத ஒருவருக்கு வரப்போகும் கணவன்/மனைவி பெயர் ஏன் உங்கள் ஓலைகளில் இருப்பதில்லை? அவருக்கு திருமணம் ஆன  பிறகு மட்டும் எப்படி ஓலையில் பெயர் வருகிறது?

அப்பாவி ஏழை மக்களை ஏமாற்றி கொள்ளை அடிக்கிறீர்களே? உங்கள் மனசாட்சி உங்களை உறுத்தவே உறுத்தாதா?

Tuesday, January 15, 2013

எஜமானனுக்காக காத்திருக்கும் மாடு (புகைப்படம்)


போதையில் இருந்தாலும் மாட்டை எவனும் ஆட்டையை போட்டுரக்கூடாதுனு தெளிவா இருக்காரு.

க்ளிக்கிய இடம்: வளசரவாக்கம்

Saturday, January 12, 2013

நமக்கெல்லாம் புற்று நோய் (Cancer) வருமா?

நமக்கெல்லாம் புற்று நோய் (Cancer) வர வாய்ப்பே இல்லை என்று நிறைய பேர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். நாங்களும் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தோம்.

என் தந்தைக்கு திடீரென உடல் நலம் சரியில்லாமல் போனது. தொடர்ச்சியான இருமல். நுரையீரல் வெளியில் வந்து விழுந்து விடுமோ என்று பயப்படும் அளவுக்கு இருமல். உள்ளூர் மருத்துவரிடம் காண்பித்து கேட்டபொழுது “புற்று நோய் மாதிரி தெரிகிறது. உடனே அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் சேருங்கள்” என்று சொன்னார். எங்களுக்கு அவர் சொன்னதில் நம்பிக்கை இல்லாமல் வேறு ஒரு மருத்துவரிடம் அழைத்து சென்றோம். அவர் என் தந்தைக்கு புகைப்பிடித்தல் போன்ற கெட்ட பழக்கங்கள் உண்டா என்று கேட்டார். எந்த கெட்ட பழக்கமும் கிடையாது, தண்ணீரைக் கூட கொதிக்க வைத்துதான் குடிப்பார் என்று சொன்னோம். அப்படியென்றால் இது கேன்சராக இருக்க வாய்ப்பே இல்லை என்று ஆணித்தரமாக சொல்லி விட்டார். அங்கேதான் என் தந்தையின் அழிவு ஆரம்பம் ஆனது.

தொடர்ந்து உடல்நிலை மோசமாகிக்கொண்டே போக, மதுரையில் ஒரு பிரபல மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு என்ன சிகிச்சை செய்தார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். ஒரு கட்டத்தில் என் தந்தை அடிக்கடி சுயநினைவிழந்து கீழே விழுந்தார். என் உறவினர்கள் ஆலோசனைப்படி என் தந்தையை சென்னைக்கு அழைத்து வந்து வடபழனியில் உள்ள பிரபல மருத்துவமனையில் சேர்த்தோம். ஏற்கனவே பல ஆயிரங்கள் செலவு செய்து இதுவரை எடுத்த அத்தனை சோதனைகளையும் நிராகரித்துவிட்டு புதிதாக அனைத்து சோதனைகளையும் செய்தார்கள்.

இறுதியில் அவருக்கு நுரையீரலில் புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. அது ஒரு கொள்ளைக்கார மருத்துவமனை என்பது ஒரு வாரம் என் தந்தையை அவர்கள் நடத்திய விதத்தில் தெரிந்து விட்டது. ஒருவழியாக அங்கிருந்து என் தந்தையை அப்புறப்படுத்தி சேத்துப்பட்டில் இருக்கும் ஒரு பிரபல புற்று நோய் மருத்துவமனையில் சேர்த்தோம். அதன் பின்னர் என் தந்தை கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் தேறி வந்தார்.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கும் வந்து விட்டார். இதற்குள் கிட்டத்தட்ட 8 லட்சம் செலவாகி விட்டது. அதன் பின்னர் ஒரு வருடம் எந்த பிரச்சினையும் இன்றி ஓடியது.

ஒரு நாள் திடீரென்று பார்வை மங்கியது. கண் டாக்டரிடம் சென்று காண்பித்தோம். ஆனால் பார்வையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. கண் மருத்துவரின் ஆலோசனைப்படி தொடர்ந்து மருந்து சாப்பிட்டு வந்தவர் ஒருநாள் மயங்கி விழுந்தார். உள்ளூர் மருத்துவர் ஒருவர் ஊசி போட்டதில் மயக்கம் தெளிந்தது. ஆனால் பேச்சு வரவில்லை. நிலைமை ரொம்ப மோசமாகி இருந்தது. சென்னை வரை கொண்டுவர அவகாசம் இல்லை. அதனால் மதுரை அப்பல்லோவில் சேர்த்தோம். புற்று நோய் மூளைக்கு பரவியதுதான் காரணம்.

அந்த கடைசி இரண்டு நாட்களில் அவரது உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்து கொண்டே வந்தது. செயற்கை சுவாசம் மூலம் மூச்சு விட்டுக்கொண்டிருந்தார். நான் அருகில் சென்று அப்பா என்று சொல்லி அவர் கையை பிடித்தேன். அவருடைய கை என் கையை இருகப்பற்றிக்கொண்டது. அவர் என்னிடம் ஏதோ சொல்ல நினைக்கிறார் என்பது மட்டும் புரிந்தது. மூடியிருந்த அவர் விழிகளின் ஓரம் கண்ணீர். அந்தத் தருணம், இதுவரை நான் அனுபவித்திராத சோகம்.

எல்லாம் முடிந்துவிட்டது. என் தந்தையின் வாழ்நாள் சேமிப்பு, சேர்த்துவைத்த சொத்து எல்லாம் கரைந்தும் உயிர் மிஞ்சவில்லை. நாங்கள் செய்த மாபெரும் தவறு என்னவென்றால், உள்ளூர் மருத்துவர் ஆரம்பத்திலேயே புற்றுநோயாக  இருக்கும் என்று சொன்னதும் அதை நம்பியிருக்க வேண்டும். ஆரம்பத்திலேயே சிகிச்சை தொடங்கியிருந்தால் இன்னும் ஓரிரு ஆண்டுகள் என் தந்தை வாழ்ந்திருக்க கூடும்.

புற்று நோய் என்பது உயிரை குடிக்கும் நோய் மட்டுமல்ல. அது ஒரு சித்ரவதை. உடலை பரிசோதனை செய்யும்போதும், சிகிச்சையின் போதும் அனுவவிக்கும் வேதனையானது ஒவ்வொரு முறையும் செத்து செத்து பிழைப்பதற்கு சமம்.
நானோ ஓரிரு மாதங்களில் சகஜ நிலைக்கு திரும்பிவிட்டேன். என் தந்தை அனுபவித்த துன்பங்களை அருகிலேயே இருந்து பார்த்த என் தாயும் அவரை எப்படியாவது காப்பாற்றிவிட மாட்டோமா என்று துடியாய் துடித்த என் தங்கையும் இன்று வரை மீளவே இல்லை.

நமக்கு நெருங்கிய உறவினர்கள் யாராவது புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே அதன் விபரீதங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது.

கேன்சருக்கென்று ஒரு தடுப்பூசி இல்லாத காரணத்தால் அது பற்றிய விழிப்புணர்வு ஓரளவுக்காவது பலனளிக்கும் என்று நினைக்கிறேன்.

Thursday, January 10, 2013

வெற்றியும் நானும் - தொடங்கியதும் முடிந்து போன நட்பு (உண்மை சம்பவம்)

எங்கள் அலுவலகத்தில் என்னுடன் பணிபுரிந்த நண்பர் வெற்றிவேல் என்பவருக்கும் எனக்கும் இருந்த நட்பை பற்றிய பதிவு இது. விழிப்புணர்வு பதிவும் கூட.

புதிதாக அறிமுகம் ஆகும் நபர்களிடம் நான் அவ்வளவு சீக்கிரம் பழகுவதில்லை. ஆனால்  வெற்றியோ எல்லோரிடமும் சுலபமாக பழகுபவர். ஒருமுறை நான் புதிதாக வாங்கியிருந்த டிஜிட்டல் கேமராவை நண்பர்களிடம் காட்டிக்கொண்டிருந்தேன். அப்போது  கேமராவை கையில் வாங்கிய வெற்றி அதிலுள்ள எல்லா பட்டன்களையும் அமுக்கி அமுக்கி பார்த்துக்கொண்டிருந்தார். எனக்கு சரியான கோபம் இருந்தாலும் கோபத்தை அடக்கிக்கொண்டு பொறுமையாக இருந்துவிட்டேன். இதுபோல ஒருசில சம்பவங்களால் நான் அவரிடம் பழகுவதை தவிர்த்து வந்தேன்.

ஆனால் அலுவல் நிமித்தமாக அவருக்கும் எனக்கும் அடிக்கடி தொடர்பு ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. சிறிது நாளில் அவர் மேல் இருந்த கோபம் எல்லாம் போய் நட்பு வளர ஆரம்பித்தது. நன்றாக பேசவும் அரட்டை அடிக்கவும் ஆரம்பித்தோம். நட்பு வளர்ந்து பேஸ்புக் மூலம் தொடர்ந்தது. ஒருநாள் நான் வீட்டுக்கு சென்றதும் பேஸ்புக் திறந்து பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது வெற்றி சாட்டில் "வீட்டுக்கு போனதும் பேஸ்புக் ஆ?" என்று கேட்டார் நான் பதிலுக்கு ஒரு சிரிப்பு ஸ்மைலியை மட்டும் போட்டு விட்டேன்.



இதுதான் நான் அவரிடம் பண்ணும் கடைசி சாட் என்பது அப்போது எனக்கு தெரிந்திருக்கவில்லை.

மறுநாள் (11/11/11) காலை 6:45 மணிக்கு நடந்த சாலை விபத்தில் வெற்றி பலியாகி விட்டார் என்று தகவல் வந்தது. குறைந்த நாட்களே பழகி இருந்தாலும் என் மனம் அடைந்த துயரம் மிக அதிகம். வீட்டிலிருந்து விபத்து நடந்த இடத்துக்கு இருசக்கர வாகனத்தில் கிளம்பினேன். கை கால்களில் நடுக்கம். எவ்வளவு முயன்றாலும் வண்டி 30 கிமீ வேகத்தை தாண்டவில்லை. நான் சென்று சேர்ந்த பொழுது உடலை மருத்துவமனைக்கு எடுத்து சென்று விட்டார்கள்.

வெற்றி அவர் மனைவி இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்ததால் இருவரும் அதிகாலை 6 மணி அளவில் இரு சக்கர வாகனத்தில் வந்திருக்கிறார்கள். இவர்கள் வாகனத்தை முந்திச்செல்ல அசுர வேகத்தில் ஒரு அரசுப் பேருந்து வந்திருக்கிறது.  சில நாட்களுக்கு பெய்த மழையில் சாலை ஓரம் குண்டும் குழியுமாக இருந்ததினால் இவரால் உடனடியாக வழி விட முடியவில்லை. பொறுமை இல்லாத பேருந்து டிரைவர் இடித்ததில் இருவரும் கீழே விழுந்து விட்டனர். வெற்றியின் மனைவி இடது பக்கம் விழுந்ததால் இலேசான காயங்களுடன் உயிர் தப்பினார். ஆனால் பேருந்து வெற்றியின் தலையை நசுக்கி விட்டு நிற்காமல் சென்று விட்டது. மனைவி கண்முன்னே கணவன் துடிதுடித்து இறப்பது எவ்வளவு கொடியது?

விபத்து நடந்தது எங்கள் அலுவலகத்துக்கு மிகவும் அருகில் என்பதால் அப்போது பணியில் இருந்த அனைவரும் (சுமார் 100 பேர்) விபத்து நடந்த இடத்தில் கூடி இருந்தார்கள். அனைவர் முகத்திலும் சோகம். பெரும்பாலானவர்கள் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றுவிட்ட அரசுப் பேருந்து டிரைவரை கைது செய்ய வென்றும் என்று கோரி சாலை மறியல் செய்ய வேண்டும்  என்று திட்டமிட்டுக்கொண்டிருந்தார்கள். எங்கள் அலுவலக மேலாளர் ஒருவர் வந்து அனைவரும் அலுவலகத்துக்கு திரும்பி வந்து வேலை செய்யுமாறு சொல்லிக்கொண்டிருந்தார். இன்னொரு மேலாளர்  அங்கிருந்த போலீசிடம் "இங்கே இவர்கள் (சக ஊழியர்கள்) நிற்கும் ஒவ்வொரு நிமிடமும் கம்பெனிக்கு நஷ்டம். அதனால் இவர்களை துரத்தி விடுங்கள்" என்று சொன்னதாக நண்பர்கள் சொன்னார்கள். மிகவும் வருத்தமாக இருந்தது.

வெற்றி செய்த தவறுகள்: 

1. தலைக்கவசம் அணியாமல் வண்டி ஓட்டியது.
2. லைசன்ஸ் வாங்காமல் வண்டி ஓட்டியது.
 தலைக்கவசம் அணியாததால் உயிரை இழக்க நேரிட்டது.
லைசன்ஸ் இல்லாததால் மனைவிக்கு இழப்பீடு கிடைக்கவில்லை.

சக ஊழியர்கள் அனைவரும் ஒரு நாள் ஊதியத்தை வெற்றியின் மனைவிக்கு கொடுத்து உதவுவதாக முடிவெடுத்தோம்.  அந்தத் தொகையுடன் எங்கள் நிறுவனம் சார்பிலும் ஒரு தொகை சேர்த்து அவர் மகள் பெயரில் டெபாசிட் செய்தார்கள். ஆம் அவருக்கு மூன்று  வயதில் ஒரு மகள்  இருக்கிறாள். மேலும் சில ஊழியர்கள் சென்னை மேயரை சந்தித்து நிலைமையை சொல்லி அரசு நிவாரணத் தொகை வாங்கிக் கொடுத்தார்கள்.

எவ்வளவு பணம் வந்தாலும் ஒரு உயிருக்கு ஈடாகாது.

அப்பா எப்போ எழுந்திருப்பாரு என்று கேட்டுக்கொண்டு அங்கே சுற்றிக்கொண்டிருந்த அந்த மூன்று வயதுக் குழந்தையின்  முகம் இன்றும் என் மனக்கண்ணில் நிழலாடுகிறது.


Tuesday, January 8, 2013

ஆங்கில பெயர்களை தமிழாக்கம் செய்வோருக்கு ஒரு வேண்டுகோள்

ஆங்கில சொற்களை தமிழாக்கம் செய்யும் வலையுலக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவுசெய்து பெயர்ச்சொற்களை தமிழாக்கம் செய்யாதீர்கள்

உதாரணம்:

Facebook: முகப்புத்தகம்/முகநூல்.
Firefox: நெருப்புநரி.

மிகவும் கொடுமையாக இருக்கிறது.


கண்ணாயிரம் என்பவரை EYE THOUSAND என்று கூப்பிட்டால் எப்படி அபத்தமாக இருக்குமோ  அதே மாதிரி இதுவும்  உள்ளது.

Microsoft Windows, Office, Android,  இதையெல்லாம் ஏன் தமிழாக்கம் பண்ணாமல் விட்டு விட்டீர்கள்?

 

பிரபல (?) பதிவுகள்