Saturday, January 12, 2013

நமக்கெல்லாம் புற்று நோய் (Cancer) வருமா?

நமக்கெல்லாம் புற்று நோய் (Cancer) வர வாய்ப்பே இல்லை என்று நிறைய பேர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். நாங்களும் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தோம்.

என் தந்தைக்கு திடீரென உடல் நலம் சரியில்லாமல் போனது. தொடர்ச்சியான இருமல். நுரையீரல் வெளியில் வந்து விழுந்து விடுமோ என்று பயப்படும் அளவுக்கு இருமல். உள்ளூர் மருத்துவரிடம் காண்பித்து கேட்டபொழுது “புற்று நோய் மாதிரி தெரிகிறது. உடனே அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் சேருங்கள்” என்று சொன்னார். எங்களுக்கு அவர் சொன்னதில் நம்பிக்கை இல்லாமல் வேறு ஒரு மருத்துவரிடம் அழைத்து சென்றோம். அவர் என் தந்தைக்கு புகைப்பிடித்தல் போன்ற கெட்ட பழக்கங்கள் உண்டா என்று கேட்டார். எந்த கெட்ட பழக்கமும் கிடையாது, தண்ணீரைக் கூட கொதிக்க வைத்துதான் குடிப்பார் என்று சொன்னோம். அப்படியென்றால் இது கேன்சராக இருக்க வாய்ப்பே இல்லை என்று ஆணித்தரமாக சொல்லி விட்டார். அங்கேதான் என் தந்தையின் அழிவு ஆரம்பம் ஆனது.

தொடர்ந்து உடல்நிலை மோசமாகிக்கொண்டே போக, மதுரையில் ஒரு பிரபல மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு என்ன சிகிச்சை செய்தார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். ஒரு கட்டத்தில் என் தந்தை அடிக்கடி சுயநினைவிழந்து கீழே விழுந்தார். என் உறவினர்கள் ஆலோசனைப்படி என் தந்தையை சென்னைக்கு அழைத்து வந்து வடபழனியில் உள்ள பிரபல மருத்துவமனையில் சேர்த்தோம். ஏற்கனவே பல ஆயிரங்கள் செலவு செய்து இதுவரை எடுத்த அத்தனை சோதனைகளையும் நிராகரித்துவிட்டு புதிதாக அனைத்து சோதனைகளையும் செய்தார்கள்.

இறுதியில் அவருக்கு நுரையீரலில் புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. அது ஒரு கொள்ளைக்கார மருத்துவமனை என்பது ஒரு வாரம் என் தந்தையை அவர்கள் நடத்திய விதத்தில் தெரிந்து விட்டது. ஒருவழியாக அங்கிருந்து என் தந்தையை அப்புறப்படுத்தி சேத்துப்பட்டில் இருக்கும் ஒரு பிரபல புற்று நோய் மருத்துவமனையில் சேர்த்தோம். அதன் பின்னர் என் தந்தை கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் தேறி வந்தார்.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கும் வந்து விட்டார். இதற்குள் கிட்டத்தட்ட 8 லட்சம் செலவாகி விட்டது. அதன் பின்னர் ஒரு வருடம் எந்த பிரச்சினையும் இன்றி ஓடியது.

ஒரு நாள் திடீரென்று பார்வை மங்கியது. கண் டாக்டரிடம் சென்று காண்பித்தோம். ஆனால் பார்வையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. கண் மருத்துவரின் ஆலோசனைப்படி தொடர்ந்து மருந்து சாப்பிட்டு வந்தவர் ஒருநாள் மயங்கி விழுந்தார். உள்ளூர் மருத்துவர் ஒருவர் ஊசி போட்டதில் மயக்கம் தெளிந்தது. ஆனால் பேச்சு வரவில்லை. நிலைமை ரொம்ப மோசமாகி இருந்தது. சென்னை வரை கொண்டுவர அவகாசம் இல்லை. அதனால் மதுரை அப்பல்லோவில் சேர்த்தோம். புற்று நோய் மூளைக்கு பரவியதுதான் காரணம்.

அந்த கடைசி இரண்டு நாட்களில் அவரது உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்து கொண்டே வந்தது. செயற்கை சுவாசம் மூலம் மூச்சு விட்டுக்கொண்டிருந்தார். நான் அருகில் சென்று அப்பா என்று சொல்லி அவர் கையை பிடித்தேன். அவருடைய கை என் கையை இருகப்பற்றிக்கொண்டது. அவர் என்னிடம் ஏதோ சொல்ல நினைக்கிறார் என்பது மட்டும் புரிந்தது. மூடியிருந்த அவர் விழிகளின் ஓரம் கண்ணீர். அந்தத் தருணம், இதுவரை நான் அனுபவித்திராத சோகம்.

எல்லாம் முடிந்துவிட்டது. என் தந்தையின் வாழ்நாள் சேமிப்பு, சேர்த்துவைத்த சொத்து எல்லாம் கரைந்தும் உயிர் மிஞ்சவில்லை. நாங்கள் செய்த மாபெரும் தவறு என்னவென்றால், உள்ளூர் மருத்துவர் ஆரம்பத்திலேயே புற்றுநோயாக  இருக்கும் என்று சொன்னதும் அதை நம்பியிருக்க வேண்டும். ஆரம்பத்திலேயே சிகிச்சை தொடங்கியிருந்தால் இன்னும் ஓரிரு ஆண்டுகள் என் தந்தை வாழ்ந்திருக்க கூடும்.

புற்று நோய் என்பது உயிரை குடிக்கும் நோய் மட்டுமல்ல. அது ஒரு சித்ரவதை. உடலை பரிசோதனை செய்யும்போதும், சிகிச்சையின் போதும் அனுவவிக்கும் வேதனையானது ஒவ்வொரு முறையும் செத்து செத்து பிழைப்பதற்கு சமம்.
நானோ ஓரிரு மாதங்களில் சகஜ நிலைக்கு திரும்பிவிட்டேன். என் தந்தை அனுபவித்த துன்பங்களை அருகிலேயே இருந்து பார்த்த என் தாயும் அவரை எப்படியாவது காப்பாற்றிவிட மாட்டோமா என்று துடியாய் துடித்த என் தங்கையும் இன்று வரை மீளவே இல்லை.

நமக்கு நெருங்கிய உறவினர்கள் யாராவது புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே அதன் விபரீதங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது.

கேன்சருக்கென்று ஒரு தடுப்பூசி இல்லாத காரணத்தால் அது பற்றிய விழிப்புணர்வு ஓரளவுக்காவது பலனளிக்கும் என்று நினைக்கிறேன்.

4 comments:

  1. மிக மோசமான விளைவுகள் தர கூடியது. உங்க அப்பா ஆத்மா சாந்தியடையட்டும். மதுரையில் முதல் சிகிச்சையிலேயே அவருக்கு மூளையினை தாக்கி இருக்க கூடும்.எனவே தான் சுய நினைவிழந்து விழுந்து இருக்கிறார்.மிக செலவு செய்ய வேண்டிய ஒரு நோய். மூளை புற்று நோய்க்கு மருந்து பரிசோதனை நிலைமையில் தான் இருக்கிறது. டாக்டர்களை எதுவும் சொல்றதுகில்லை. ஆனால்,இன்று அமெரிக்காவில் என்ன சிகிச்சை இருக்கிறதோ அது சென்னையிலேயே கிடைக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அமுதா கிருஷ்ணா
      புற்றுநோய் வராமல் தடுப்பது பற்றி நாம் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. அரசாங்கமும் அக்கறை காட்டினால் சிறப்பாக இருக்கும்.

      Delete
  2. Replies
    1. நன்றி ஜெயதேவ் தாஸ்

      Delete

பிரபல (?) பதிவுகள்