Friday, February 11, 2011

இன்னும் எத்தன நாளைக்குப்பா ஸ்கூல்ல கொண்டு போய் விடுவிங்க?

"அம்மா இங்கே வா வா... ஆசை முத்தம் தா தா..." வகுப்பில் சொல்லிக்கொடுத்ததை சந்தோஷமாக அவன்  அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தான் ப்ரிகேஜி மாணவனாகிய அகிலன்.

"என்னடா பாட்டு. என்கிட்டே சொல்லமாட்டியா?" என்றவாறே வீட்டுக்குள் நுழைந்தார் அகிலனின் அப்பா.

"அப்பா இன்னைக்கு எங்களுக்கு டிவில ரைம்ஸ் போட்டு காமிச்சாங்கப்பா!!!"

"ஓ அப்படியா! என்னென்ன ரைம்ஸ்லாம் போட்டாங்க??"

"ம்ம்ம்ம். கரடிக்குட்டி, ராமு ராமு, வா வா கருப்பாடே... எல்லாம் போட்டாங்கப்பா"
"அப்பா அப்பா அந்த சிடி வாங்கி தாங்கப்பா. நம்ம வீட்லயும் போடலாம்.."

அந்த சிடிய குடுங்க ஒரு காப்பி பண்ணிட்டு தர்றோம்னு கேட்டப்போ அவங்க பள்ளியில (அது ஒரு சின்ன வீடு மாதிரிதான் இருக்கும்) தரமாட்டோம்னு சொல்லிட்டாங்க. அட்லீஸ்ட் அந்த சிடிய காட்டவாவது செய்யுங்கன்னு கெஞ்சி கேட்டு அதே சிடிய ஒருவழியா தேடிக் கண்டுபுடிச்சு வாங்கிக்கொடுத்தாச்சு.

அதுக்கப்புறம் தினமும் அவனுக்கு கொண்டாட்டம்தான். சிடிய கம்ப்யூட்டர்ல போட்டு விட்டுட்டு ரைம்ஸ் பாடுறதும் ஆடுறதும் அவனுக்கு ரொம்ப புடிச்ச விஷயம். அப்பப்போ கேம்ஸும் விளையாடுவான். பக்கத்து வீட்டு வாண்டு நண்பர்களை/நண்பிகளை கூட்டிட்டு வந்து பந்தா காட்டுவான். வாண்டுகள் யாரும் மாட்டலேனா பக்கத்து வீட்டு பெரிய ஆளுங்க யாரையாவது வலுக்கட்டாயமா இழுத்துட்டு வந்து பக்கத்துல உக்கார வச்சு கம்ப்யூட்டர்ல பந்தா காட்டுவான்.

இப்படி ஆனந்தமா போய்க்கிட்டிருந்த அகிலனின் பள்ளி வாழ்க்கை எல்கேஜி போனதிலிருந்து ஆட்டம் கண்டு விட்டது. காரணம் அவனோட எல்கேஜி மிஸ்.

"ஹாய் அகிலன் டார்லிங்! குட் மார்னிங்" என்று முதல் நாள் கொஞ்சிப்பேசிய அந்த ஆங்கிலோ இந்திய மிஸ் நாட்கள் செல்லச் செல்ல சொர்ணாக்காவாக மாறிப்போனார். அகிலனைப் பற்றி கம்ப்ளைன்ட் சொல்லாத நாட்கள் மிகக் குறைவு. எழுதச் சொன்னா எழுத மாட்டேங்கிறான், ரைம்ஸ் சொல்ல மாட்டேங்கிறான், கோ-ஆபரேட் பண்ண மாட்டேங்கிறான் என்று தினம் ஒரு கம்ப்ளைன்ட்.

"அகில் குட்டி..... நீ குட் பாய்தான. ஏன்டா மிஸ் சொல்றத செய்ய மாட்டேங்கிற?" அப்பா கேட்டார்.

"மிஸ்ஸுதாம்பா என்னைய சும்மா சும்மா திட்டிட்டே இருக்காங்க"

"அவங்க எழுத சொன்னத நீ ஏன் எழுதாம இருந்த?"

"நான் எழுதினேனே.. அவங்கதான் நான் எழுதுனத புல்லா அழிச்சுவுட்டுட்டாங்க."

"நீ அழகா எழுதியிருக்கலாம்ல"

"எனக்கு எழுதத் தெரியலன்னு எத்தன தடவ சொல்றது உங்களுக்கு" அவன் குரலில் இயலாமை கலந்த கோபமும் அழுகையும்.

எப்பொழுதும் அப்பாவுக்கு முன்னாள் சென்று பைக்கில் ஏறி அமர்ந்துகொள்ளும் அகிலன் இன்று காலை எழுந்ததிலிருந்தே சண்டித்தனம் செய்து கொண்டிருந்தான். எதற்கெடுத்தாலும் அழுதான்.

"சீக்கிரம் வந்து வண்டியில ஏறு. லேட் ஆகுது...." அப்பா கத்தியும் வேண்டுமென்றே மெதுவாக நடந்து வந்தான். அவனுக்கு பள்ளி செல்ல விருப்பம் இல்லை என்பது அவன் நடவடிக்கையில் தெரிந்தது.

வண்டியில் செல்லும்போது, "மிஸ் சொல்றத நல்ல பிள்ளையா செய்யணும். அகிலன் பேட் பாய்னு பேர் வாங்கக் கூடாது. சரியா?" என்று சொல்லிக்கொண்டே வந்த அவன் அப்பாவிற்கு அவனின் மவுனம் மட்டுமே பதிலாக இருந்தது. பள்ளிக்கருகில் சென்றதும் திடீரென்று கேட்டான் "இன்னும் எத்தன நாளைக்குப்பா என்ன ஸ்கூல்ல கொண்டு போய் விடுவிங்க?" சற்றே நிலைகுலைய வைத்த கேள்வி. சமாளித்துக்கொண்டு "நல்லா படிச்சாதான் வேலைக்குப் போயி காசு சம்பாதிச்சு கார் வாங்க முடியும்" அப்படி இப்படின்னு சொன்ன பதில்கள் எதுவுமே அவனை பாதிக்கவில்லை.

பைக்கை நிறுத்திவிட்டு வகுப்பறையை நோக்கி நடந்தனர் இருவரும். வகுப்பு வாசலில் மிஸ் நிற்பது தூரத்திலிருந்தே தெரிந்தது. வகுப்பை நெருங்க நெருங்க அகிலனின் வேகம் குறைந்தது. பின்னால் கையைக் கட்டிக்கொண்டு முகம் முழுவதும் கோபக்கனலுடன் முறைத்துப் பார்த்துக்கொண்டிருக்கும் மிஸ்ஸைப் பார்த்ததும் மிரண்டு போய் அப்பாவின் கையை விடுவித்துக்கொண்டு திரும்பி ஓடத் தயாரானான் அகிலன். அவன் கையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு கிட்டத்தட்ட இழுத்துக்கொண்டு போய் மிஸ் கையில் ஒப்படைத்தார் அவன் அப்பா. ஆங்கிலத்தில் கன்னாபின்னாவென்று ஏதோ கத்திக்கொண்டே அவனை உள்ளே தள்ளி கதவைப் பூட்டினார் அந்த மிஸ்.

"அந்த மிஸ் ராட்சஸிங்க... எச் எம் கிட்ட சொல்லி உங்க பையன வேற செக்க்ஷனுக்கு மாத்திடுங்க"

"கோகுல் மம்மியும் ஷெரின் மம்மியும் மிஸ் பிறந்தநாளைக்கு சுடிதார் எடுத்துக் கொடுத்தாங்க. நீங்களும்  அது மாதிரி அப்பப்போ கிப்ட் ஏதாவது கொடுக்கணும். அப்போதான் உங்க பையன நல்லா வச்சுப்பாங்க"

இதெல்லாம் அகிலன் அப்பாவுக்கு கிடைத்த அறிவுரைகள். வேற செக்க்ஷனுக்கு மாற்றினால் அங்கும் இதே நிலைமை என்றால் என்ன செய்வது? எச் எம்மும் அந்த மிஸ்ஸும் வேண்டியவர்களாக இருந்தால் நிலைமை இன்னும் மோசமாகி விடுமே என்று பலவாறு யோசித்த அகிலனின் அப்பா நடப்பது நடக்கட்டும் என்று அமைதியாக இருந்து விட்டார்.

இப்போது அகிலன் யூகேஜி படிக்கிறான். இங்கும் ஆங்கிலோ இந்தியன் மிஸ் தான். ஆனால் தங்கமான மிஸ். சந்தோஷமாக பள்ளிக்கு சென்றாலும் எல்கேஜியின் பாதிப்பிலிருந்து அவன் இன்னும் மீளவில்லை. மீள்வான் என்ற நம்பிக்கையும் எனக்கில்லை.

டிஸ்கி: அகிலனின் அப்பா வேற யாரும் இல்ல நான்தான். இது ஒரு உண்மை சம்பவம்.

4 comments:

  1. உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு...

    பை த பை 'வேடந்தாங்கல் ' னு ஒரு கடைய வச்சு ஓட்டிக்கிட்டு இருக்கேன்! ஒரு எட்டு வந்து பாத்திட்டு போங்க பாஸ்! மறந்துடீங்க பாஸ்..

    ReplyDelete
  2. அருமையான பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
    நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?

    ReplyDelete
  3. May i know who's that vaandu pasanga ??

    ReplyDelete
  4. கோகுல் மம்மியும் ஷெரின் மம்மியும் இருக்கும் வரை இது போல் பல (Anglo Indian) ஆசிரியர்கள் இருக்கதான் செய்வார்கள் அல்லது அது மாதிரி ஒரு ஆசிரியரை உருவாக்குவார்கள்!

    ReplyDelete

பிரபல (?) பதிவுகள்